நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 27 ஜனவரி, 2022

பிரித்தானியாவில் இலங்கையர்களிற்கு உடனடி தொழில் வாய்ப்பு

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட்டிடம்(Lord Tariq Ahmed) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksha) கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அமைச்சரை, கடந்த வாரம் அரச தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் இந்த விடயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு
 தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளதென ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் தெரிவித்தார்.
அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் 
என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் உறுதியளித்தார்.
இந்த நிலையில், இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்த அரச தலைவர், அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறும் அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>