சிரியா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டமைக்குக் காரணமான இரசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பாக ஐ.நா சபை அங்கு மறுபடியும் மீளாய்வில் இறங்கியுள்ளது.
ஐ.நா சபையைச் சேர்ந்த ஆயுதப் பரிசோதகர்கள் சிரியாவில் இடம்பெற்றதாகக் குற்றஞ் சாட்டப் பட்ட 7 இரசாயன ஆயுதத் தாக்குதல்களை தற்போது ஆய்வு செய்ய முனைந்துள்ளனர்.
இதில் முக்கியமாக ஆகஸ்ட் 21 டமஸ்கஸ்ஸில் இடம்பெற்ற சம்பவத்துக்குப் பின்னரான 3 தாக்குதல்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. மேலும் இத்தாக்குதல்களை திருத்தமாக மீளாய்வு செய்யுமாறு சிரிய அரசு ஐ.நா இடம் விண்ணப்பித்து இருந்தது. இவை அனைத்திலும் முக்கியமானதாக ஆகஸ்ட் 21 ஆம் திகதி சிரிய அரசால் பிரயோகிக்கப் பட்டதாகக் கருதப் படும் இரசாயனத் தாக்குதலே கருதப்பட்டது. நூற்றுக் கணக்கான மக்களைப் பலி கொண்ட இத்தாக்குதலினால் தான் தனது இரசயான ஆயுதங்களை சிரியா மேலைத்தேய அரச மத்தியஸ்தத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் சிரியாவில் ஐ.நா இன் தலையீடு சர்வதேச சமூகத்துக்கு அதன் மீது கிடைத்த அழுத்தமான வெற்றி என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிரிய அரசு தொடர்ந்து அனுமதி அளிக்கும் சந்தர்ப்பத்தில் புதிய ஆய்வாளர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் அங்கு சென்றடைய உள்ளனர்.
இதேவேளை சிரிய வன்முறைகள் முடிவில்லாமல் தொடர்ந்து வருகின்றது. இறுதியாக டமஸ்கஸ்ஸுக்கு வடக்கே ரான்குஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே வெடித்த கார் குண்டு வெடிப்பில் 20 பொது மக்கள் வெள்ளிக்கிழமை கொல்லப் பட்டுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக